போபால்: ரயில் நிலையத்தில் உள்ள ஐஆர்சிடிசி உணவகத்தில் இருக்கும் உணவை எலி சுவைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், இடார்சி ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வேவின் ஐஆர்சிடிசி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் இருக்கும் உணவை எலி ஒன்று சுவைக்கும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஐஆர்சிடிசி உணவகத்தில் எலி சுவைக்கும் காட்சியை படம்பிடித்த பயணி ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, “இதனால்தான் ரயில் நிலையங்களில் உள்ள ஐஆர்சிடிசி உணவகத்தில் நான் உணவு வாங்குவதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் மற்றும் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தையும் டேக் செய்துள்ளார்.
இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு அதிருப்தி தெரிவிக்கப்பட்ட நிலையில், “இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போபால் மண்டல ரயில்வே மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று ரயில்வே அமைச்சகம் பதிலளித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் மகாராஷ்டிரம் மற்றும் கோவா இடையேயான லோக்மான்யா திலக் டபுள் டெக்கர் விரைவு ரயிலின் சமையறையில் எலி சுவைத்த விடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஐஆர்சிடிசி வழங்கும் உணவுகள் குறித்து அடிக்கடி இதுபோன்ற எதிர்மறையான செய்திகள் வெளியாகி வருவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.