அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியை புறக்கணித்தவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ஜன. 22ஆம் தேதி சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
136 சனாதனத்தைச் சேர்ந்த 25,000 ஹிந்து மதத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிறப்பு விருந்தினர்களாக 10,000 பேர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்க மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சௌதிரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அழைப்பு குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், ராமர் கோயில் நிகழ்ச்சி அழைப்பை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. கடவுள் ராமரை கற்பனை உருவம் எனக் கூறியது இதே காங்கிரஸ் கட்சிதான். தற்போது ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளது. ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்தவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.