27வது தேசிய இளைஞர் தின விழாவினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக்கில் நடைபெற உள்ள 27வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்க உள்ளார்.
தேசிய இளைஞர் விழாவை முன்னிட்டு நாட்டின் 763 மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள 'எனது பாரதம்' தன்னார்வலர்கள், நேரு யுவகேந்திரா சங்கதன் மற்றும் பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள்.
மேலும் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் சாலைப் பாதுகாப்புப் பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள்.
பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் முக்கியமான போக்குவரத்து இடங்களில் போக்குவரத்தை கையாள்வதில் உதவுவதோடு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்.
இதையும் படிக்க | போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
தன்னார்வலர்கள் அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று குழந்தைகளுடன் கதை சொல்லும் அமர்வுகள் மற்றும் பல்வேறு அரசாங்க திட்டங்களைப் பற்றிய தகவல்களை எடுத்துரைப்பார்கள்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.