புதுதில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் இரு அவைகளும் தொடங்கவுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அவை நடவடிக்கைகள் மாற்றப்பட்ட பிறகு முதல்முறையாக குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போதைய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்வார்.
இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை ரூ. 6,000-ல் இருந்து இரண்டு மடங்காக உயர்த்தி அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ. 12,000 கோடி செலவாகும்.
தேர்தலுக்கு பிறகு ஆட்சிக்கு அமைக்கும் அரசில் இடம்பெறும் புதிய நிதியமைச்சரால் 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படும்.
இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரானது பிப்ரவரி 9-ஆம் தேதி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.