காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தைத் துவங்க காங்கிரஸ் தலைவர்கள் பயணிக்கவிருந்த சிறப்பு இண்டிகோ விமானம் கடும் பனிமூட்டத்தின் காரணமாக தாமதமடைந்துள்ளது. தில்லியிலிருந்து மணிப்பூரிக்கு செல்லும் சிறப்பு விமானம் இன்று(ஞாயிறு) காலை கடும் பனிமூட்டத்தால் தாமதமாகியுள்ளது.
ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் தில்லி விமான நிலையத்தில் காத்திருந்தனர். மணிப்பூரில் நண்பகலில் கொங்ஜம் போர் நினைவிடத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் துவங்கவிருந்தது.
இதையும் படிக்க: சென்னையில் கடும்புகை மூட்டம்: விமான சேவை பாதிப்பு
மாலை இடைவேளை 5.30 மணியளவிலும், மணிப்பூரி இம்பாலில் உள்ள கால்பந்து மைதானத்தில் இரவு தங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விமான தாமதத்தினால் அந்த திட்டங்களில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடைபயணத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 6,700 கிலோமீட்டர் தூரத்தை 67 நாள்களில் கடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 110 மாவட்டங்களில் வீடுவீடாக சென்று மக்களைச் சந்திக்கவிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.