அயோத்தி ராமர் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, நாளை (ஜன. 22) ஹிமாசலில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவரான பால ராமா் சிலை திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வில் பிரதமா் மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்க உள்ளனா். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை அமைப்புகளுக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய பணியாளா் நல அமைச்சகம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
அதேபோல், அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜன. 22-ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்துக்கும் ஏற்கெனவே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, ஹிமாசலப் பிரதேச மாநிலத்துக்கு நாளை பொது விடுமுறை என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்.