மும்பையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள விக்ரோலி கிழக்கு பகுதியில் டாக்டர் அம்பேத்கர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 1.47 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 6 நோயாளிகள் வெளியேற்றப்பட்டு ராஜாவாடி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், தீ விபத்தில் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, மும்பையின் மலாட் பகுதியில் உள்ள 22 மாடி கட்டடத்தில் சனிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.