ஐந்து ஆண்டுகளுக்குள் மூன்று முறை பதவியேற்பு விழா நடத்துபவர் நிதீஷ் குமார் என்று பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் விமர்சித்துள்ளார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
இதையும் படிக்க | பச்சோந்திகளுக்கே போட்டி நிதீஷ்குமார்: காங்கிரஸ் தலைவர்
இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துவந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், தற்போது அதில் இருந்து விலகி, மீண்டும் பாஜக உடன் கைகோர்த்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரியுள்ளார்.
இதனைக் குறிப்பிட்டு பேசியுள்ள மேற்குவங்க மாநில பாஜக முன்னாள் தலைவர் திலீப் கோஷ், “பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியில் இருந்த நிதீஷ் குமார், திடீரென அதில் இருந்து விலகி, அணி மாறியுள்ளார்.
வழக்கமாக எந்தவொரு முதல்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பதவியேற்பார்கள். ஆனால் நிதீஷ் குமார் ஐந்து ஆண்டுகளில் மூன்று முறை முதல்வராகப் பதவியேற்கிறார். அதுவும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அரசியல் கூட்டணியில் இருந்து பதவியேற்கிறார்.
என்னைப் பொருத்தவரை நிதீஷ் குமார் ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி. அவரின் இத்தகைய செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.
மேற்கு வங்க பாஜக முன்னாள் தலைவர் திலீப் கோஷின் இந்த விமர்சனம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அம்மாநில பாஜக செய்தி தொடர்பாளர் மறுத்துவிட்டார்.
2014 வரை பாஜக கூட்டணியில் இருந்த நிதீஷ் குமார், 2015 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியில் இணைந்து முதலமைச்சரானார். அந்தப் பதவிக்காலம் முடியும் முன்பே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜக ஆதரவுடன் முதல்வர் பதவியை தொடர்ந்தார்.
இதையும் படிக்க | பிகாரில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்!
அதேபோல, 2020ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக உடன் சேர்ந்து வென்ற நிதீஷ் குமார், தேர்தலுக்குப் பின்பு அக்கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். தற்போது மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.