
புது தில்லி: நாட்டில் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையை, பிரதமர் மோடி கடவுளைக் கேட்டுத்தான் எடுத்தாரா? என்று மக்களவையில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மோடி ஆட்சியில் ஏழைக் குடும்பங்களுக்கு உணவுக் கூட கிடைக்கவில்லை, பிரதமர் மோடிக்கு பயந்து, சில அமைச்சர்கள் எனக்கு வணக்கம் கூட சொல்வதில்லை என்று மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
அக்னிவீர் திட்டம், மணிப்பூர், நீட் தேர்வு என நாட்டின் முக்கிய பிரச்னைகள் அனைத்தையும் ராகுல் இன்று மக்களவையில் எழுப்பினார். இதற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் உள்ளிட்டோர் பதிலளித்துள்ளனர்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, தனக்கும் கடவுளுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. இதனை நான் சொல்லவில்லை. பிரதமர் நரேந்திர மோடியே சொல்லியிருக்கிறார். அவர் தான், நான் இயல்பாக பிறந்தவன் இல்லை, தான் ஒரு பிதாமகன் என்று மோடியே சொல்லியிருக்கிறார். கடவுளுடன் எனக்கு நேரடி தொடர்பிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அதனால்தான் கேட்கிறோம், கடவுளைக் கேட்டுத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம், நாட்டில் வேலை வாய்ப்புக்கான முதுகெலும்பை மத்திய அரசு உடைத்துவிட்டது.
காங்கிரஸ் கட்சி உங்களைக் கண்டு அஞ்சவில்லை, நீங்கள்தான் காங்கிரஸ் கட்சியைப் பார்த்து அச்சப்படுகிறீர்கள் என்றும் ராகுல் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.