/

எருமை தீர்ப்பளித்தது எப்படி?: உ.பி.யில் ருசிகரம்!

உ.பி.யில் ஒரு எருமை மாட்டுக்கு இரு நபர்கள் உரிமம் கேட்டதால் காவல்துறையினர் குழப்பம்

News image
Updated On :6 ஜூலை 2024, 10:41 am IST

உத்தரப் பிரதேசத்தில் ஒரு எருமை மாட்டுக்கு இரண்டு நபர்கள் உரிமம் கேட்டதால் காவல்துறையினர் குழப்பமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் ராய் அஸ்கரன்பூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தலால் சரோஜ் என்பவரது எருமை மாடு, சில தினங்களுக்கு முன் வழிதவறி, காணாமல் போய்விட்டது. இதனைத் தொடர்ந்து நந்தலால், தன்னுடைய எருமையைத் தேடத் தொடங்கியுள்ளார்.

பின்னர், நந்தலால் தேடத் தொடங்கிய மூன்றாவது நாளில், பக்கத்து கிராமமான புரேரி ஹரிகேஷில் தன்னுடைய எருமை இருப்பதைக் கண்டறிந்துள்ளார். இதனையடுத்து, தன்னுடைய எருமையினை அழைத்துச் செல்ல முற்பட்டபோது, ஹனுமான் சரோஜ் என்பவர், நந்தலாலின் எருமையைச் சொந்தம் கொண்டாடியுள்ளார்.

``எருமையினைக் கொடுக்க முடியாது; அது தம்முடையது” என்று எருமையின் உரிமையாளரான நந்தலாலிடம் வாதாடியுள்ளார்.

இதனையடுத்து, இருவரும் காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும், காவல்துறையினராலும் `எருமையின் உரிமையாளர் யார்?’ என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

பின்னர், இறுதியாக நந்தலால் மற்றும் ஹனுமான் ஆகிய இருவரையும், அவரவர் கிராமத்திற்குச் செல்லும் திசையை நோக்கி நிற்க வைத்துள்ளனர். `எருமை யார் பின்னால் செல்கிறதோ? அவரே எருமையின் உரிமையாளர்’ என்ற முடிவுக்கு வரலாம் என்று ஆலோசித்துள்ளனர்.

காவல்துறையினரின் ஆலோசனையின்படி செய்தபோது, நந்தலால் பின்னால் எருமை சென்றதால், நந்தலாலே எருமையின் உரிமையாளர் என்பது அறியப்பட்டு, அவரிடமே எருமையை ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.