மகாராஷ்டிரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவிகளுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு (இ.டபிள்யூ.எஸ்), சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு (எஸ்.இ.பி.சி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவிகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கவுள்ளது.
பெண்கள் கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக ரூ.906 கோடியை ஒதுக்கீடு செய்ய மகாராஷ்டிர அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கிப் படித்துவரும் ஆண், பெண் ஆகிய இருவரின் உயர்கல்வி கட்டணத்தையும் மாநில அரசு ரத்து செய்து, அவர்களின் உயர்கல்வியையும் இலவசமாக்கியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி இந்த அறிவிப்புகள் வெளியாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும், மாநில மற்றும் பெண்களின் வளர்ச்சிக்காக இத்திட்டத்தை அறிவித்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இன்று (ஜூலை 9) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெண்களின் உயர்கல்வி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், அவர்களின் உயர்கல்வி கட்டணத்தை அரசே ஏற்க ஒப்புதல் பெறப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 2024-25 கல்வி ஆண்டுக்காக ரூ.906 கோடியை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் பெறப்பட்டது.
இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பகுதி உதவி பெறும் கல்லூரிகள், அரசு சாரா கல்லூரிகள், பாலிடெக்னிக், தன்னாட்சி அரசு பல்கலைக் கழகங்கள், திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் சேரும் மாணவிகள் பயன் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் கல்வி, மருத்துவம், மருந்தகம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன் வளர்ப்பு, மற்றும் பால் வளர்ச்சி ஆகிய கல்விப் பிரிவுகள் இதில் அடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.