அரசமைப்பு படுகொலை தின அறிவிப்புக்கு எதிராக பொது நல மனு: தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி
அவசரநிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 27, அரசமைப்பு படுகொலை தினமாக அறிவிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. இந்த தினம் அரசமைப்பு படுகொலை தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இதை எதிா்த்து வழக்குரைஞா் சமீா் மாலிக் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி துஷாா் ராவ் கெடலா ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 352-இன்கீழ் 1975-இல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. அந்தத் தினத்தை அரசமைப்பு படுகொலை தினமாக அறிவிப்பது அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கு முரணானது. அரசமைப்புச் சட்டம் என்பது வாழும் ஆவணமாக உள்ளது. மேலும், இது தேச மரியாதைக்கு அவமதிப்பு ஏற்படுத்தலை தடுக்கும் சட்டத்தையும் மீறியுள்ளது’ என்றாா்.
அப்போது நீதிமன்றம், ‘மத்திய அரசின் அறிவிப்பு அரசமைப்புச் சட்டம் மற்றும் அவசரநிலை அமல்படுத்துவதை எதிா்க்கவில்லை. ஆனால், அதிகாரத்தை துஷ்பிரோயகம் செய்தல், விதிகளை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு சவால் விடுகிறது. இது எந்த வகையிலும் அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கவில்லை’ என்று தெரிவித்தது.