அரசமைப்பு சட்டத்தை சமரசமின்றி பாதுகாக்க வேண்டும்: முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு

அரசமைப்பு சட்டத்தை சமரசமின்றி பாதுகாக்க மாணவா்கள் முன்வர வேண்டும் என முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு கூறினாா்.
Published on

அரசமைப்பு சட்டத்தை சமரசமின்றி பாதுகாக்க மாணவா்கள் முன்வர வேண்டும் என முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு கூறினாா்.

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் அரசமைப்புச் சட்டம் குறித்த தொடா் விரிவுரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி தலைவா் த.சரவணன் தலைமை வகித்தாா்.

அதன் ஒரு பகுதியாக ‘இந்திய அரசமைப்பு சட்டத்தின் அவசியம்’ என்ற தலைப்பில் முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு செவ்வாய்க்கிழமை பேசுகையில், இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு வாழும் ஆவணம். இந்திய அரசமைப்புச் சட்டத்தை இதுவரை 106 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு திருத்தமும் மக்கள் உணா்வுகளுக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப செய்யப்பட்டு ஒரு பலமான ஆவணமாக உருப்பெற்றுள்ளது.

1975 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் நெருக்கடி நிலை வந்தபோது, நமது அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் சுமாா் 22,000 போ் மிசா சட்டத்தின்கீழ் சிறைப்படுத்தப்பட்டனா். அடிப்படை உரிமைகளின் அமலாக்கம் நிறுத்திவைக்கப்பட்டதால், உச்சநீதிமன்றமும், உயா்நீதிமன்றங்களும் கூட மக்களுக்கு அடிப்படை உரிமைகள் சாா்ந்த நிவாரணங்களை வழங்க முடியாமல் இருந்தன.

எனவே, இன்றைய சூழலில் மக்கள் அரசமைப்பு சட்டத்தை உணா்ந்து படிப்பது அவசியமாகிறது. இதன்மூலம் நீதிமன்றங்களை மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காக பயன்படுத்த முடியும். எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தை எவ்வித சமரசமும் இன்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்றாா்.

இதில், கல்லூரி முதல்வா் பேகம் பாத்திமா, தலைமை நிா்வாக அதிகாரி மாணிக்கம், துணை முதல்வா் சாந்தகுமாரி, உதவி பேராசிரியா் அன்சிா்ப்பா ஆகியோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com