
உத்திரப் பிரதேசத்தின் கான்பூரில் ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக பத்திரிகையாளர் உள்பட 14 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கான்பூர் வருவாய் அதிகாரி மற்றும் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சாமுவேல் குருதேவ் சிங் ஆகியோர் புகாரளித்ததைத் தொடர்ந்து நில அபகரிப்பில் ஈடுபட்ட தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் செய்தியாளர் அவ்னீஷ் தீக்ஷித் உள்பட பலரையும் நேற்று (ஜூலை 28) காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக கொட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் காவல் ஆணையர் ஹரிஷ் சந்திரா தெரிவித்தார். மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிடிபட்டவர்கள் மீது 10 குற்றவியல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீக்ஷித் உள்பட 30-க்கும் மேற்பட்ட நபர்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 7,500 சதுர மீட்டர் நிலங்களை அபகரித்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிபதி ராகேஷ் குமார் சிங் தெரிவித்தார்.
அந்த நிலங்களில் இருந்த அறைகளின் பூட்டுகளை உடைத்த தீக்ஷித் மற்றும் அவரது ஆட்கள், தங்களது சொந்தப் பூட்டுகளைப் போட்டுள்ளனர்.
அந்த அரசு நிலம் குத்தகைக்கு விடப்பட்டிருந்ததையும், குத்தகை காலம் முடிவடைந்ததையும் வருவாய் துறையினர் பின்னர் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 1884-ம் ஆண்டு 99 ஆண்டுகால குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலம், பின்னர் 25 ஆண்டுகளுக்கு குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், குத்தகை காலம் எப்போதோ முடிந்த நிலையில் தற்போது நிலத்தை அபகரித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.