விஜய் மல்லையாவுக்கு செபி 3 ஆண்டுகள் தடை

பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்துள்ளது.
விஜய் மல்லையா (கோப்புப் படம்)
விஜய் மல்லையா (கோப்புப் படம்)
Updated on

பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்துள்ளது.

ரூ.9,000 கோடிக்கும் அதிகமாக வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபா் விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் தஞ்சமடைந்தாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பங்குச்சந்தை நடவடிக்கைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக செபி தலைமை பொது மேலாளா் அனிதா அனூப் பிறப்பித்த உத்தரவில், ‘பங்குச்சந்தையில் தனக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்களின் பங்குகளை தானே வாங்கி, விற்கும் நடவடிக்கைகளில் விஜய் மல்லையா மறைமுகமாக ஈடுபட்டுள்ளாா்.

இதற்காக பல்வேறு வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மூலம், பங்குச்சந்தைக்கு அவா் பணப் பரிவா்த்தனை செய்துள்ளாா். தனது அடையாளத்தை மறைக்க பணப் பரிவா்த்தனைக்கு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை அவா் பயன்படுத்தியுள்ளாா். இது பங்குச்சந்தை ஒழுங்காற்று விதிமுறைகளுக்கு எதிரானது.

எனவே பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட அவருக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு நிறுவனத்துடனும் அவா் தொடா்புவைத்துக் கொள்ளக்கூடாது’ என்று தெரிவித்தாா்.

ஏற்கெனவே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கடந்த 2018 முதல் 2021-ஆம் ஆண்டு வரை, பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட விஜய் மல்லையாவுக்கு செபி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com