கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.
17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக எடியூரப்பா மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிஐடி பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடா்பாக விசாரணைக்கு ஜூன் 12 ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தில்லியில் இருப்பதால் ஜூன் 17ஆம் தேதி ஆஜராவதாக எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
விசாரணைக்கு ஆஜராகாத எடியூரப்பாவைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்குமாறு பெங்களூரு, முதலாம் விரைவு நீதிமன்றத்தை சிஐடி வியாழக்கிழமை அணுகிய நிலையில், ஜாமீனில் வெளியே வரமுடியாத வாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், எடியூரப்பா தில்லியில் இருப்பதாகவும், திங்கள்கிழமை பெங்களூரு திரும்புவதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
மேலும், அவரிடம் விசாரணை நடத்திய பிறகு சட்டப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை சிஐடி காவல்துறையினர் மேற்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சிறப்பு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி எடியூரப்பா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.