4 மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு ஜூலை 12-ல் இடைத்தேர்தல்!
4 மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு ஜூலை 12-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தமாக உள்ள 5 இடங்களில் 3 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ததாலும், 2 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் இந்த இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த ஜனவரி மாதம் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
அவர் தான் பிரதிநிதித்துவப்படுத்திய தார்வாட் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார்.
பின்னர், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் பாஜகவில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் சுவாமி பிரசாத் மௌரியா சமாஜ்வாதி கட்சியில் இருந்தும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியதால் அந்த இடமும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பிகார் மற்றும் ஆந்திரத்தில் உள்ள தலா ஒரு இடங்களில் எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் காலியானது.
மேலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்சி ஷேக் முகமது இக்பால் ஏப்ரல் மாதம் ராஜிநாமா செய்ததால் ஆந்திர சட்டப் பேரவையில் மற்றொரு இடம் காலியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

