பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று (மார்ச் 1) வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 2 பேர் உணவகத்தில் வேலை செய்யும் தொழிலாளிகள் எனவும், மற்ற 7 பேர் வாடிக்கையாளர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, உணவகத்தில் பெண்ணின் கைப்பை கண்டெடுக்கப்பட்டது. உணவகத்தில் இருந்த கைப்பையில் இருந்து வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து உண்மையான காரணத்தை கண்டறிய வெடிகுண்டு செயலிழக்கும் படை மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
பெங்களூரு ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த வெடிவிபத்து குறித்து கர்நாடக முதல்வர் சித்தாரமையா கூறுகையில், "உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். உணவகத்தில் யாரோ கைப்பையை வைத்துவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்றார்.