புதுதில்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பாஜகவில் இணைந்து, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், நான் தேர்தலில் போட்டியிடவில்லை என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
நான் பாஜகவில் இணைந்து குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக ஊடகங்களில் தவறான செய்திகள் பரவி வருகின்றது.
நான் தேர்தலிலோ, குர்தாஸ்பூர் தொகுதியிலோ போட்டியிடவில்லை. எனது ஆர்வம் பல்வேறு திறமைகளை கொண்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதிலும், உதவுவதிலும் தான் உள்ளது.
மேலும் எனது யுவேகன்(YOUWECAN) அறக்கட்டளையின் மூலம் அதனை தொடர்ந்து செய்வேன். எங்களின் சிறந்த திறனுக்கு ஒன்றாக மாற்றத்தை ஏற்படுத்துவோம் என தெரிவித்துள்ள யுவராஜ் சிங், பாஜகவில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.