கர்நாடகத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு தடை!

பஞ்சு மிட்டாய்களில் தீங்கு விளைவிக்கும் ரோடமைன் பி, கோபி மஞ்சூரியனில் டாட்ராசின் ரசாயனமும் கலக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கர்நாடகத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு தடை!

கர்நாடக மாநிலத்தில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்தது.

இந்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்திலும், பஞ்சு மிட்டாய் மற்றும் வண்ண கோபி மன்சூரியனுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில்,

கடந்த சில நாள்களுக்கு முன்பு கர்நாடகம் முழுவதும் 171-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் மாதிரிகளை ஆய்வுக்குள்படுத்தினர். இதில் 107 இடங்களில் பாதுகாப்பற்ற செயற்கை நிறமிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சு மிட்டாய்களில் தீங்கு விளைவிக்கும் "ரோடமைன் பி" மற்றும் கோபி மஞ்சூரியனில் "டாட்ராசின்" ஆகிய ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது பாதுகாப்பற்றது என்று அவர் கூறினார்.

உணவு தயாரிக்கும் உணவகங்களில் இதுபோன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும் உத்தரவைக் கடைப்பிடிக்காவிட்டால் அவர்களின் உரிமமும் ரத்து செய்யப்படலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

அதேசமயம் வெள்ளை நிற பஞ்சு மிட்டாய் போன்ற இயற்கையான ஒன்றை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com