2019, ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்துத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தர ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ர ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து நாளைக்குள் விவரங்களை வெளியிட உத்தரவிட்டது.
தேர்தல் நன்கொடை பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் எஸ்பிஐக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஜூன் 30 வரை கால அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பதிவிட்டதாவது:
“இந்த ஆட்சியின் சூழ்ச்சியில் இருந்து ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் காப்பாற்றியுள்ளது. ஒரு நாளில் முடியக் கூடிய எளிய வேலைக்கு எஸ்பிஐ காலஅவகாசம் கோரியது சிரிப்பாக இருந்தது. உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவதைக் கண்டு அரசு பயப்படுகிறது என்பதுதான் உண்மை.
உச்சநீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டுள்ள இந்த மிகப் பெரிய ஊழல், பாஜகவுக்கும் கார்ப்ரேட் முதலாளிகளுக்கும் இடையேயான புனிதமற்ற தொடர்பை அம்பலப்படுத்தியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களுடன் பேசியது:
“எஸ்பிஐயின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதை வரவேற்கிறோம். இதன்மூலம், அரசியல் கட்சிகளுக்கான நிதியுதவி, குறிப்பாக தேர்தல் நிதியுதவியில் உள்ள வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுடன் பேசியது:
“காலஅவகாசம் கோரி எஸ்பிஐ விண்ணப்பித்திருக்கவே கூடாது. அவர்களின் விண்ணப்பத்தை தூக்கி எறிந்த உச்சநீதிமன்றம், நாளைக்குள் முழு விவரங்களை அளிக்கும்படி உத்தரவிட்டதில் மகிழ்ச்சி.
தேர்தல் பத்திரத்தை வாங்கியவர்கள் யார்?, பயனாளிகள் யார்?, நன்கொடை அளித்தவர்களுக்கு பரிசாக ஏதேனும் அரசால் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு.” எனத் தெரிவித்துள்ளார்.