கர்நாடகத்தில் கடந்த 30-40 ஆண்டுகளில் இதுபோன்ற வறட்சியை கண்டதில்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு கடந்த சில நாட்களாக நிலவி வருகிறது. பெரும்பாலான ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. தண்ணீர் பிரச்னை காரணமாக பல்வேறு தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்பு நடத்த முடிவு செய்துள்ளன.
கடந்த ஆண்டு போதியஅளவு மழை பெய்யாததே தண்ணீர் பிரச்னைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இருப்பினும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புறநகர்ப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் 3,500 லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் தண்ணீர் பிரச்னை எழுந்துள்ளதால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம், கடந்த 30-40 ஆண்டுகளில் இதுபோன்ற வறட்சியை நாங்கள் கண்டதில்லை. முன்பு வறட்சி இருந்தபோதிலும், இவ்வளவு அதிக அளவிலான தாலுகாக்களை வறட்சி பாதிக்கவில்லை. காவிரி நதிநீர் தேவைப்படும் இடங்களுக்கு வழங்கப்படுகிறது.
பெங்களூருவில் உள்ள 13,900 ஆழ்துளை கிணறுகளில் 6,900 ஆழ்துளை கிணறுகள் செயலிழந்து விட்டன. அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களை எடுத்துக்கொண்டு தண்ணீர் விநியோகம் செய்ய டேங்கர்களை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.