காணொலியில் கருத்திட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை: ஆந்திர முதல்வர் அதிரடி!
ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. கீதாஞ்சலி தற்கொலை விவகாரத்தில் அவரைத் துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டிய சமூக வலைத்தள பயனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சமூக வலைத்தளத்தில் சீண்டலுக்கு உள்ளானதால் தற்கொலை செய்ததாக கூறப்படும் கோதி கீதாஞ்சலி தேவியின் (29) குடும்பத்துக்கு ரூபாய் 20 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.
தெனாலியைச் சேர்ந்த கீதாஞ்சலி தற்கொலைக்கு, தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனை கட்சிகளின் சமூக வலைத்தள குழுக்கள் தான் காரணம் என ஒய்.எஸ்.ஆர் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ஆந்திர முதல்வர் இது குறித்து பேசும்போது, பெண்ணின் மாண்பு மற்றும் மரியாதையை அத்துமீறும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது சட்டம் கடும் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
யூடுயூப் தளத்தில் வெளியான கீதாஞ்சலியின் நேர்காணலின் கமெண்ட் பகுதியில் தவறாக பதிவிட்ட பயனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
ஜகன்ண்ணா திட்டத்தின்கீழ் வீடு வழங்கப்பட்டதை அடுத்து, ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை புகழ்ந்து கீதாஞ்சலி பேசியதாகவும் அதற்காக சமூக வலைத்தளங்களில் வெறுப்பு மற்றும் கேலியை எதிர்கொண்டதாகவும் தெரிகிறது.
இணையவழி சீண்டல் மற்றும் தொல்லையால் இந்த முடிவுக்கு பெண் சென்றதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.