பெங்களூருவில் உள்ள உணவக விடுதியில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சேஷாத்திரிபுரம் பகுதியில் உள்ள ஜெகதீஷ் உணவகத்தில் 37 வயது ஜரீனா என்ற பெண் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.
இதனிடையே, அறையைச் சுத்தம் செய்வதற்காக நேற்று மதியம் 4.30 மணியளவில் ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனர். நீண்ட நேரமாகியும் பதில் கிடைக்காததால் மற்றொரு சாவியைக் கொண்டு கதவைத் திறந்தபோது பெண் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக உணவக மேலாளர் அளித்த புகாரின்பேரில், மர்ம மரணம் என போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் சுற்றுலா விசாவின் அடிப்படையில் ஜரீனா பெங்களூரு வந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. சாட்சியங்களின்படி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்து வருகின்றனர். உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தடய அறிவியல் ஆய்வகக் குழு சம்பவ இடத்தில் அறை முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ஜரீனா தங்கியிருந்த அறைக்கு வேறு யாரேனும் சென்றார்களா என சிசிடிவி மற்றும் பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றனர்.