பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்கள் குறித்து அவதூறாகப் பேசிய மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷோபா கரந்தலஜே, பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் குறிப்பிட்டுப் பேசும்போது தமிழர்கள் கர்நாடகத்திற்கு வந்து குண்டுவைப்பதாகக் கூறினார். அவரின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேச்சுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஷோபா தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், தமிழர்கள் குறித்து அவதூறாகப் பேசிய மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஷோபா மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடகா தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.