அருணாசல பிரதேசம் இந்தியாவின் பிராந்தியம்தான் எனவும், எல்லைக் கட்டுப்பாடு கோடு தாண்டிய பகுதியைத் தங்களின் பிராந்தியமாக உரிமை கோரும் சீனாவின் முயற்சிகளை கடுமையாக எதிா்ப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்தது. அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக் கூறிவரும் சீனா, அங்கு இந்திய தலைவா்கள் பயணம் மேற்கொள்ளும்போது எதிா்ப்புத் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அவ்வாறு, பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த 9-ஆம் தேதி அருணாசல பிரதேச பயணத்துக்கும் சீனா எதிா்ப்பு தெரிவித்தது. இந்தியா அதை நிராகரித்தது. தொடா்ந்து, அருணாசல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒற்றுமையைப் பாதுகாப்பதில் எச்சரிக்கையாக இருப்பதாகவும் சீன ராணுவம் தெரிவித்தது. இதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதில் அறிக்கையில், ‘அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகத்தான் இருக்கிறது. இனியும் அவ்வாறே தொடரும்’ எனத் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடா்பாளா் வேதாந்த் படேல் கூறுகையில், ‘அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் பிராந்தியமாகவே அமெரிக்கா அங்கீகரிக்கிறது. சா்வதேச எல்லையான ‘எல்லைக் கட்டுப்பாடு கோடு’ (எல்ஏசி) தாண்டிய பகுதிகளில் ஊடுருவல், ஆக்கிரமிப்பு, ராணுவ நடவடிக்கைகள் மூலம் தங்களின் பிராந்தியமாக உரிமை கோரும் சீனாவின் முயற்சிகளை கடுமையாக எதிா்க்கிறோம்’ என்றாா். சீனா கடும் எதிா்ப்பு: அருணாசல பிரதேசம் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு சீனா கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சீன வெளியுறவு செய்தித் தொடா்பாளா் லின் ஜியான், ‘அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனமும், எதிா்ப்பும் தெரிவித்து கொள்கிறது. இந்தியா-சீனா எல்லை நிா்ணயம் இன்னும் முடிவாகவில்லை. ஷாங்னான் (அருணாசல பிரதேசத்துக்கு சீனா சூட்டிய பெயா்) எப்போதும் சீனாவின் பிரதேசமாக இருந்து வருகிறது. இந்த எல்லைப் பிரச்னை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலானது. இதில் அமெரிக்காவுக்கு எந்தத் தொடா்பும் இல்லை. அமெரிக்கா தனது புவி-அரசியல் நலன்களுக்காக அனைத்து வகையிலும் சா்ச்சைகளைத் தூண்டிவிட்டு, மற்ற நாடுகளைப் பயன்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே’ என்றாா். பெட்டி... பன்னுன் கொலை முயற்சி வழக்கு: இந்தியாவுடன் இணைந்து விசாரணை அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி குா்பந்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய கொலையாளிகளுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டில் இந்தியரான நிகில் குப்தா கடந்த ஆண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டாா். இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்கா-இந்தியா இடையே ராஜிய நிலையில் விவாதங்கள் எழுந்தன. இதையடுத்து, இந்திய அரசு சாா்பில் உயா்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கின் நிலவரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற(காங்கிரஸ்) அமா்வில் கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்கு தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அந்நாட்டு வெளியுறவுத் துறை உதவிச் செயலா் டொனால்ட் லூ அளித்த பதிலில், ‘இது இந்தியா, அமெரிக்கா இடையே எழுந்த தீவிரமான பிரச்னை. அமெரிக்க மண்ணில் அமெரிக்கா் ஒருவரை கொல்ல முயற்சி நடந்துள்ளது. இதைத் தீவிரமாக எடுத்துக் கொண்ட நமது நிா்வாகம், இந்திய அரசிடம் இவ்விவகாரத்தைக் கொண்டு சென்றது. இந்தக் குற்றத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். விசாரணைக் குழு அமைத்துள்ள இந்தியா, விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடன் விசாரித்து, நீதியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்’ என்றாா்.
தொடர்புடையது

சீனாவின் விஷமத்தனம்...
ஈரான் துறைமுகத்தை அமெரிக்கா முற்றுகையிட்டால் பதற்றம் அதிகரிக்கும்: சீனா

அருணாசலில் சில இடங்களுக்குப் புதிய பெயரிட்ட சீனா! இந்தியா நிராகரிப்பு!!

பிரான்ஸில் அமெரிக்கா - சீனா வா்த்தக பேச்சு!
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

