பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா மனைவியின் கார் திருட்டு போனதாக தில்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு தில்லி கோவிந்தபுரியில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் நட்டா மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மார்ச் 19ஆம் தேதி சர்வீஸுக்காக விடப்பட்டுள்ளது.
மீண்டும் காரை எடுக்க நட்டா மனைவியின் ஓட்டுநர் ஜோகிந்தர் வந்தபோது கார் திருடுபோனது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தெற்கு தில்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில், திருடப்பட்ட கார் குருகிராம் நோக்கி சென்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தில்லி புறநகர்ப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து கார் தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.