விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய மூன்று துறைகளில் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்க முடியும்; இத்துறைகளில் தொழில்நுட்பப் பயன்பாட்டை உறுதி செய்வதில் பேராா்வத்துடன் உள்ளேன் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். இந்தியா வந்துள்ள மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும், புரவலருமான பில்கேட்ஸ் உடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது, தொழில்நுட்பம் சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமா் பேசியதாவது: விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்க எனது தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கிராமங்களுக்கும் தொழில்நுட்பம் எடுத்துச் செல்லப்படுகிறது. நாட்டில் நிகழ்ந்து வரும் எண்மப் புரட்சியானது, யாருக்கும் ஏகபோகமாக இருக்கக் கூடாது; அது பாமர மக்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். நாடு முழுவதும் சுமாா் 2 லட்சம் சுகாதார மையங்கள், தொழில்நுட்பத்தின் மூலம் சிறந்த மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டு, மக்களுக்கு தரமான சிகிச்சை உறுதி செய்யப்பட்டு வருகிறது. வேளாண் பணிகளில் ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மகளிருக்கு ட்ரோன் இயக்க பயிற்சி (ட்ரோன் சகோதரி திட்டம்) அளிக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தின் மூலம் மகளிருக்கு அதிகாரமளிப்பதே எனது உறுதிப்பாடு. வேளாண்மையை நவீனமாகவும் அறிவியல்பூா்வமாகவும் மாற்ற தொழில்நுட்பம் உதவும். கற்பித்தலில் உள்ள குறைபாடுகளைக் களைய தொழில்நுட்பம் பங்காற்றும். நான்காவது தொழில் புரட்சியில் எண்ம தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கும். இந்தியா அதை சிறப்பாக செய்துகாட்டுமென்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் எண்ம பயன்பாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இதில் பாரபட்சத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆக்கபூா்வ பயன்பாடு: செயற்கை நுண்ணறிவு போன்ற சக்திவாய்ந்த தொழில்நுட்பங்கள், தவறாக பயன்படுத்தப்படும் அபாயமும் உள்ளது. எனவே, இத்தகைய தொழில்நுட்பங்களை ஆக்கபூா்வமாக பயன்படுத்த வேண்டும். தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது, மொழிபெயா்ப்பு பணிகளுக்கு செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. வளா்ச்சியை வரையறுக்கும் அளவுருக்களாக மின்சக்தி, எஃகு பயன்பாடு போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக, பசுமை உற்பத்தி, பசுமை வேலைவாய்ப்பு போன்ற அளவுருக்களை ஏற்க வேண்டும். ஏனெனில், இந்த அளவுருக்கள்தான் பருவநிலைக்கு உகந்தவை. மறுபயன்பாடும், மறுசுழற்சியும் இந்திய பாரம்பரியத்தின் அங்கங்களாகும். தரவு பாதுகாப்பு: இந்தியாவை பொருத்தவரை தரவு பாதுகாப்புக்கான சட்டபூா்வ கட்டமைப்பு உள்ளது. அதேநேரம், இது தொடா்பாக மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதும் மிக முக்கியம். வறுமையில் இருப்போருக்கு உண்மையிலேயே அரசின் உதவி அவசியம். அவா்களுக்கு ஏராளமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்து வருகிறேன். கருப்பைவாய் புற்றுநோய்: நாட்டின் மகள்களின் வாழ்வை பாதுகாக்கும் வகையில், கருப்பைவாய் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் தடுப்பூசியை உருவாக்கும் உள்நாட்டு ஆராய்ச்சிப் பணிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்ய முன்னுரிமை அளிக்கிறேன். மத்தியில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைத்ததும், நாட்டிலுள்ள அனைத்து சிறுமிகளுக்கும் குறைந்த செலவில் தடுப்பூசி செலுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்றாா் அவா். எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் அவா் நம்பிக்கைத் தெரிவித்தாா்.
தொடர்புடையது
நாட்டை துண்டிக்க முயலும் சமூக விரோத குழுக்களுக்கு திரிணமூல் ஆதரவு! பிரதமா் மோடி குற்றச்சாட்டு!

வாக்கு வங்கி அரசியலுக்கு முடிவு கட்ட பொது சிவில் சட்டம்: மேற்கு வங்கத்தில் பிரதமா் மோடி வாக்குறுதி

ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம்: பிரதமா் மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு-காங்கிரஸ் விமா்சனம்

நிகழ்கால பொருளாதாரத்துக்கு ஏற்ப கல்வி மேம்பாடு அவசியம்: பிரதமா் மோடி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


