தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, புதுதில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் சார்பில் மாபெரும் போராட்டம் இன்று(மார்ச். 31) நடைபெறுகிறது.
அதில் கலந்துகொண்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால், சிறையில் இருந்து அரவிந்த் கேஜரிவால் மக்களுக்காக அனுப்பிய கடிதத்தை படித்து காண்பித்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, “இன்று நான் வாக்கு கேட்கவில்லை.புதிய இந்தியாவை உருவாக்க 140 கோடி இந்தியர்களை அழைக்கிறேன்.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நாகரிகத்தைக் கொண்ட மாபெரும் தேசம் இந்தியா. நான் சிறைக்குள்ளிருந்து நம் பாரதத் தாயை நினைத்துப் பார்க்கிறேன். பாரதத் தாய் வலியால் துடிக்கிறாள். ’இந்தியா’ கூட்டணிக்கு வாய்ப்பு கிடைத்தால் புதிய இந்தியாவை உருவாக்குவோம்.
'இந்தியா’ கூட்டணியின் சார்பாக 6 வாக்குறுதிகளை முன்வைக்கிறேன்.
நாடு முழுவதும் மின் தடை இல்லாத நிலை உருவாக்கப்படும். ஏழை மக்களுக்கு மின்சாரம் இலவசமாக விநியோகிக்கப்படும். நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் அரசு பள்ளிகளை உருவாக்குவோம்.
ஒவ்வொரு கிராமத்திலும் மொஹல்லா கிளினிக்குகளை(தில்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள மாதிரி மருத்துவமனை திட்டம்) உருவாக்குவோம். பல்நோக்கு சிறப்புப் பிரிவுகள் அடங்கிய அரசு மருத்துவமனைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும். இதன்மூலம், அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
விவசாயிகளுக்கு பயிர்களுக்கு சரியான விலை வழங்கப்படும். தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
மேற்கண்ட 6 வாக்குறுதிகளும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்று அரவிந்த் கேஜரிவால் கடிதம் மூலம் தெரிவித்திருப்பதாக அவரது மனைவி சுனிதா கேஜரிவால் பேசினார்.