புது தில்லி: அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருவமானவரித் துறை ஆகியவை பாஜகவின் செல்கள் என்று பிகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.
தில்லி மதுக் கொள்கை வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தலைநகர் தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் சார்பில் மாபெரும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை(மார்ச். 31) நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய பிகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், பாஜக தலைமையிலான மத்திய அரசு எதிர்க்கட்சிகள் மீது மத்திய அமைப்புகளை பயன்படுத்துவதை கடுமையாக விமர்சித்தவர், அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு(சிபிஐ) மற்றும் வருமான வரித்துறை(ஐடி) ஆகியவை பாஜகவின் செல்கள் என்று கூறினார்.
லாலு பிரசாத் பலமுறை துன்புறுத்தப்பட்டுள்ளார். என் மீதும் வழக்குகள் உள்ளன. என் அம்மா, சகோதரிகள், மைத்துனர், என் தந்தையின் உறவினர்கள் என அனைவரும் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. நம் தலைவர்கள் பலர் மீது வழக்குகளும், சோதனைகள் நடத்துகிறார்கள். ஆனால் அச்சுறுத்தலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். போராடுவோம்.. சிங்கங்கள் மட்டுமே கூண்டில் அடைக்கப்பட்டுள்ளன.நாங்கள் எல்லோரும் சிங்கங்கள்.. நாங்களும் போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.
நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது. ஆர்.எஸ்.எஸ் கொள்கையை செயல்படுத்த எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறினார்.
தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் மாபெரும் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு தலைவர் பரூக் அப்துல்லா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரவிந்த் கேஜரிவால் மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.