பிஹாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சமையல் எரிவாயு உருளை (எல்பிஜி சிலிண்டர்) வெடித்ததில் பலியாகியதாக காவலர்கள் தெரிவித்தனர்.
பிஹார் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நர்னைன் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு, ஷாஹிபா பேகம் சமையல் செய்ய அடுப்பை இயக்கிய போது சிலிண்டர் ரெகுலேட்டர் தீப்பிடித்தது. அதனையடுத்து சிலிண்டர் வெடித்ததில் ஷாஹிபா, அவரது மூன்று குழந்தைகள் ஆகிய நால்வர் பலத்த காயமுற்றனர்.
கிஷன்கஞ்சில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நால்வரையும் புர்னே மருத்துவ கல்லூரிக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
புர்னே மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பலனின்றி அவர்கள் இறந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.
வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த சப்னம் பேகம் மற்றும் அவரது தம்பி ஆகியோரும் காயமடந்தனர்.
ஷாஹிபாவின் உறவினர்கள் புர்னே கல்லூரி மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதாலே அவர்கள் உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.