வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் அமித்ஷா பேட்டியளித்துள்ளார்.
மக்களவை 3-ஆம் கட்ட தேர்தலையொட்டி, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 7) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்களித்தனர்.
அகமதாபாத்தில் வாக்களித்த பின், அமித் ஷா செய்தியாளர்களுடன் பேசுகையில், "கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல், வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குஜராத்தில் 2.5 மணி நேரத்தில் 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நிலைத்தன்மை, பாதுகாப்பு, நாட்டின் வளம் மற்றும் இந்தியாவை வறுமையில் இருந்து விடுவிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்த ஜனநாயக திருவிழாவில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.