கேரளத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.69 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கேரளத்தில் 2,970 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 4,27,153 மாணவர்களில் 4,25,563 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது 99.69 சதவிகித தேர்ச்சி ஆகும்.
கடந்த கல்வியாண்டில் 68,604 மாணவர்கள் முதல் நிலை (ஏ+) பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 71,831 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் முதல் நிலை (ஏ+) தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.
கோட்டயம் வருவாய் மாவட்டம் அதிக தேர்ச்சி சதவிகிதத்தை (99.92) பதிவு செய்துள்ளது.
திருவனந்தபுரத்தில் மிகக் குறைவான தேர்ச்சி சதவிகித்தை(99.08) பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, அனைத்துப் பாடங்களிலும் முதல் நிலை (ஏ+)பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் வடக்கு மலப்புரம் முதலிடத்தில் உள்ளது. 892 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 2,474 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை எட்டியுள்ளன. கடந்த ஆண்டில் 2,581 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை எட்டியிருந்த நிலையில் இந்த முறை 107 பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.
மேலும், முகநூலில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், 'சிறந்த வெற்றியைப் பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்'.தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், அடுத்த முறை வெற்றி பெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.