சாம் பித்ரோடா கருத்து குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார்.
சாம் பித்ரோடா சர்ச்சைக் கருத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கூட்டணி கட்சிகளை விமர்சித்து வருகிறார். நிற வேற்றுமையில் மக்களைப் பிரிக்கும் காங்கிரஸ் கட்சி உடனான உறவை உரிமை பேசிவரும் கூட்டணி கட்சிகள் முறித்துக்கொள்ளுமா? என மோடி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து குறித்தும் மோடியின் விமர்சனம் குறித்தும் பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பிரியங்கா, பயன்படாத விஷயங்களைப் பெரிதாக்கி பேசுவது பிரதமர் நரேந்திர மோடிக்கு கைவந்த கலை. மக்களுக்கு பயன்படும் கருத்துகளை பேசும் அளவுக்கு ஆக்கப்பூர்வமானவர் அல்ல அவர்.
நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, பண வீக்கம், பெண்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்டவை குறித்து அதே வீரியத்துடன் மோடியால் பேச முடியுமா? அதன் பிறகு அவர் விமர்சிக்கும் கருத்துகள் குறித்து பதில் அளிக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.