புது தில்லி: உடல்நலம் சரியில்லை என்று கூறி ஒரே நாளில் 300 விமான ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பணிக்கு வராமல் திடீர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதுடன் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துள்ள நிலையில் 30 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏஐஎக்ஸ் கனெக்ட் ஆகியவை டாடா குழுமத்தின் துணை நிறுவனங்களாகும். அவ்விரு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடங்கியதில் இருந்தே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமான ஊழியர்களின் ஒரு பகுதியினா் அதிருப்தி அடையத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தவறாக நிா்வகிக்கப்படுவதாகவும், அனைத்து ஊழியர்களும் சமமாக நடத்தப்படுவதில்லை என்றும் உயர் பதவிகளுக்கான நேர்காணலில் தேர்ச்சி பெற்ற போதிலும், சில ஊழியர்களுக்கு குறைந்த வேலைகள் வழங்கப்படுவதாக கடந்த மாதம் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியா்கள் சங்கம் குற்றஞ்சாட்டியது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எந்த ஊழியர் சங்கத்தையும் அங்கீகரிக்கவில்லை என்று கூறியுள்ளது.
இந்தநிலையில், உடல்நலம் சரியில்லை என்று கூறி, அந்த நிறுவன விமானிகளில் 100-க்கும் மேற்பட்டவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பணிக்கு வராமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்தனர். இதனால் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் பயணப்பதில் கால தாமதம் ஏற்பட்டதுடன், அந்த நிறுவனத்தின் 90 சதவீதத்துக்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுனர்.
இந்த நிலையில், விமானிகள் வேலை நிறுத்தம் காரணமாக விமானங்கள் சேவையில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து விமானிகள் பற்றாக்குறை சமாளிக்கும் விதமாக அடுத்த சில நாள்களுக்கு ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸின் விமானங்கள் சேவை குறைக்கப்படுவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் சிங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சென்னை-மும்பை ஏர் இந்தியா, சென்னை-கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் என 76 விமானங்கள் சேவை வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்குமாறு விமான நிறுவனத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
30 பேர் பணிநீக்கம்
இந்த நிலையில், உடல்நலம் சரியில்லை என்று கூறி ஒரே நாளில் 300 விமான ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பணிக்கு வராமல் திடீர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துள்ள நிலையில், 30 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
ஊழியர்கள் வியாழக்கிழமை மாலை 4 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என விமான நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.