பிரதமர் நரேந்திர மோடியால் நாடாளுமன்ற ஜனநாயகம் நெருக்கடியில் இருக்கிறது.அதில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் நான் கூட்டணி வைக்க மாட்டேன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில்,"காங்கிரஸுடன் சேர்ந்து அழிந்து விடுவதற்குப் பதிலாக அஜித், ஷிண்டேவுடன் இணைந்து விடுங்கள்" என்று சரத்பவாருக்கு மோடி அறிவுரை கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சரத் பவார் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் புணேவில் இன்று பேசிய சரத் பவார், பிரதமர் மோடியால் நாடளுமன்ற ஜனநாயகம் கடும் நெருக்கடியில் இருக்கிறது என்பது என்னுடைய உறுதியான கருத்து என்றும் குறிப்பிட்டார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு மற்றும் மத்திய தலைவர்களின் பங்கு இல்லாமல் இந்த நடவடிக்கைகள் சாத்தியமில்லாதவை. இது ஜனநாயகத்தின் மீது இவர்கள் எந்தளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதையே இவை காட்டுகின்றன.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத எந்தவொரு நபருடனோ, கட்சியுடனோ அல்லது கொள்கைகளுடனோ தன்னால் கூட்டணி வைக்க இயலாது என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.