
பொதுவாக ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் அல்லது பொருள்கள் வாங்கும்போது பயனர்களுக்கு வரும் ஸ்க்ராட்ச் கார்டு, நமது அதிர்ஷ்டத்தை தெரிந்துகொள்ளும் வகையில் அமைவது வழக்கம்.
ஆனால், மக்கள் அதிகம் விரும்பும் எதையும் விட்டுவைப்பதில்லை என்று முடிவெடுத்து வேலை செய்துகொண்டிருக்கும் மோசடியாளர்கள், இந்த ஸ்க்ராட்ச் கார்டையும் விட்டுவைக்கவில்லை.
ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்கிய பெங்களூருவைச் சேர்ந்த பெண்மணிக்கு வந்த ஸ்க்ராட்ச் கார்டை திறந்துபார்த்ததன் விளைவாக, அவர் ரூ.18 லட்சத்தை இழந்துள்ளார் என்ற செய்தியின் மூலம் ஸ்க்ராட்ச் மோசடி குறித்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அதாவது, அப்பெண்மணி திறந்த ஸ்க்ராட்ச் கார்டில், நீங்கள் ரூ.15.51 லட்சம் வென்றிருக்கிறீர்கள் என்று செய்தியுடன் ஒரு செல்போன் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருந்த தகவல் படி, அப்பெண்ணும் அந்த எண்ணை தொடர்புகொண்டுள்ளார். அடுத்தமுனையில் பேசியவர், அப்பெண்ணின் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களைக் கோரியிருக்கிறார்.
பெண்மணி கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அங்கு இதுபோன்ற பரிசுகளுக்கு 4 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று கூறி படிப்படியாக அவரிடமிருந்து ரூ.18 லட்சம் வரை ஏமாற்றிப் பெற்றிருக்கிறார்கள். பிறகுதான், அப்பெண் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்திருக்கிறார்.
எனவே, ஸ்க்ராட்ச் கார்டு என்பதன் மூலம், உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது என்ற செய்திகள் வந்தால் அதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.