பிரதமர் மோடி (கோப்புப் படம்)
பிரதமர் மோடி (கோப்புப் படம்)ANI

மைசூருவில் மோடி தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு ரூ.80 லட்சம் பாக்கி! யார் கொடுப்பார்கள்?

மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக மோடி வருகை தந்தபோது, தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு கட்டண பாக்கி.
Published on

கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டிருந்தபோது தங்கியிருந்த நட்சத்திர விடுதிக் கட்டணம் ரூ.80.6 லட்சம் நிலுவையில் இருப்பதாகவும் அது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விடுதி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தேசிய புலிகள் காப்பகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை இணைந்து மைசூருவில் நடந்த பந்திப்பூர் புலிகள் காப்பக பொன் விழாவில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மாநில வனத்துறை சார்பில், ஏப்ரல் 9 முதல் 11ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த திட்டத்துக்கு ரூ.3 கோடி செலவானது. இதனை மத்திய அரசு முழுவதும் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில்தான், மத்திய அரசிடம் இருந்து இது தொடர்பான அறிவுறுத்தல் கிடைக்கப்பெற்றுள்ளது. உண்மையில் நிகழ்ச்சிக்கான செலவு ரூ.6.33 கோடியாக ஆகியிருக்கிறது.

மத்திய அரசிடமிருந்து வெறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், மிச்சம் ரூ.3.33 கோடி அனுப்பப்படவில்லை. இது தொடர்பான மத்திய -மாநில அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பிரதமர் மோடி பங்கேற்பதால் பல கூடுதல் வசதிகள் செய்யப்பட்டதால் நிகழ்ச்சி செலவு திட்டமிடப்பட்டதை விடவும் இரண்டு மடங்காகிவிட்டதால், செலவுத் தொகை அனுப்புமாறு மாநில வனத்துறை தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டே இருந்தது.

பிரதமர் மோடி (கோப்புப் படம்)
தலைநகர் தில்லி யார் பக்கம்? - வெற்றி தொடருமா? கூட்டணி வெல்லுமா?

ஆனால், அந்தத் தொகையை மாநில அரசே செலுத்த வேண்டும் என்று மத்திய அரசின் தேசிய புலிகள் காப்பகக் கழகத்திடமிருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அதுபோல, மைசூருவில் உள்ள ராடிசன் ப்ளூ பிளாஸா விடுதிக் கட்டணத்தையும் மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்ற.ன

தொடர்ந்து, மாநில அரசிடமிருந்து, விடுதிக் கட்டணம் உள்ளிட்ட இதரக் கட்டணங்களை செலுத்துமாறு கடிதம் அனுப்பப்பட்டும், அதற்கும் இதுவரை மத்திய அரசிடமிருந்து பதில் கிடைக்கப்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடைய, ராடிசன் ப்ளு பிளசாவின் நிதித் துறை பொது மேலாளர், வனத்துறைக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறார். 12 மாதங்கள் கடந்த பிறகும், விடுதியில் தங்கியிருந்தது உள்ளிட்ட நிலுவையில் உள்ள ரூ.80.6 லட்சத்தை செலுத்தவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி (கோப்புப் படம்)
மக்களவைத் தேர்தல்: காஷ்மீர் டூ கன்னியாகுமரி - திருக்குறள் எக்ஸ்பிரஸில் அலசல்!

எனினும், விடுதிக் கட்டணம் கட்டப்படாமலேயே இருந்துள்ளது. இதற்கு வருடத்துக்கு 18 சதவீத வட்டியும் விதிக்கப்பட்டு, கூடுதலாக 80 லட்சத்துடன் 12.09 லட்சத்தையும் இணைத்து அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால், விடுதியின் நிர்வாகச் செலவுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நட்சத்திர விடுதி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால், ஜூன் 1, 2024க்குள் நிலுவையை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விடுதி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com