
ஜனநாயகத்தைக் காப்பதற்காக இந்தியா கூட்டணி போராடும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (மே 28) தெரிவித்தார்.
ஜனநாயகத்தைக் காக்கப் போராடுபவர்கள் ஒருபுறமும், அதனை அழிக்கப் பாடுபடுபவர்கள் மறுபுறமும் உள்ளதாகவும் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பான்ஸ்கான் தொகுதியில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் ராகுல் காந்தி இன்று (மே 28) பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
''இந்திய ஜனநாயகத்த் காப்பதற்காகப் போராடுபவர்கள் ஒருபுறமும், அதனை அழிக்கப் பாடுபடுபவர்கள் மறுபுறமும் உள்ளனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அக்னிபத் திட்டம் கிழித்து குப்பையில் எறியப்படும். 2022ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின்மூலம் இளம் வயதில் (பதினேழரை முதல் 21) வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 4 ஆண்டுகள் கழித்து அதில் 25 சதவீதத்தினருக்கு மட்டும் 15 ஆண்டுகளுக்கு பணிநீட்டிப்பு செய்யப்படுகிறது. இது பாதுகாப்புத் துறையில் சேர்பவர்களின் நம்பகத்தன்மையை குறைக்கும்.
அதானி, அம்பானிக்கு உதவுவதற்காக மோடியைக் கடவுள் பூமிக்கு அனுப்பிவைத்துள்ளார். விவசாயிகளுக்கும், ஏழைத் தொழிலாளிகளுக்கும் உதவுவதற்காக கடவுள் அவரை அனுப்பிவைக்கவில்லை. அப்படி ஏழைகளுக்கு உதவுவதற்காக அனுப்பியிருந்தால், கட்டாயம் அதனை செய்திருப்பார்.
எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதமாக்குவோம்.
பாஜகவிடம் இருந்து நாடு சுதந்திரம் பெறும். நாட்டிற்கு உண்மையான நல்ல நாள்கள் இனி வரப்போகின்றன. ஜுன் 4ஆம் தேதிக்கு பிறகு 'குட் பை' பாஜக (Good bye), 'குட் பை' நரேந்திர மோடிதான். மக்கள் அவர்களுக்கு விடைகொடுத்துவிடுவார்கள். மக்களை ஏமாற்றும் போலிக்காரருக்கு (நரேந்திர மோடி) இன்னும் 7 நாள்களே உள்ளன என ராகுல் காந்தி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.