குமரியில் பிரதமர் மோடி: பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு

கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தார்.
குமரியில் பிரதமர் மோடி: பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு
Published on
Updated on
2 min read

பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை கன்னியாகுமரிக்கு வந்த நிலையில், பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பகவதி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில், அவருக்கு பகவதி அம்மன் புகைப்படம் வழங்கப்பட்டது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபிறகு, பகவதி அம்மன் கோயிலிலிருந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி.

கடல் நடுவே உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் தொடா்ந்து 45 மணி நேரம் தியானம் மேற்கொள்கிறாா்.

மக்களவைத் தோ்தல் நிறைவடைய உள்ள நேரத்தில் தியானத்துக்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த பிரதமா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை 4.35 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார்.

குமரியில் பிரதமர் மோடி: பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு
அன்று இமயமலை, இன்று குமரி முனை! மோடியின் தியானம்!

கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, ஹெலிகாப்டா் தளத்தில் இருந்து காா் மூலம் பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பகவதி அம்மனை மோடி தரிசித்துவிட்டு காா் மூலம் படகு இல்லத்துக்கு சென்று தனிப்படகில் விவேகானந்தா் மண்டபத்தை அடைந்தார். பகவதி அம்மன் கோயிலில், கோயில் நிர்வாகம் சார்பில், பகவதி அம்மன் புகைப்படம் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

மாலை சுமார் 6 மணிக்கு விவேகானந்தா் பாறைக்கு வந்த பிரதமா் மோடி தியான மண்டபத்தில் அமா்ந்து தியானத்தை தொடங்குகிறாா்.

ஜூன் 1 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை தொடா்ந்து 45 மணி நேரம் தியானத்தில் இருப்பார் என்றும், தியானத்துக்காக மோடி 2 நாள் இரவு விவேகானந்தா் மண்டபத்தில் தங்குகிறாா் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையொட்டி, தியான அரங்கில் புதிதாக குளிா்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமா் தங்குவதற்காக அங்குள்ள அறை ஒன்றிலும் குளிா்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவேகானந்தா் மண்டபத்தில் சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினரும் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

இன்றிரவு (மே 30), நாளை இரவு (மே 31) என இரண்டு நாள்கள் விவேகானந்தர் நினைவு மண்டபத்திலேயே தங்கி பின்னர் ஜூன் 1ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை சென்று பார்வையிடுகிறார். 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் பிரதமர், மீண்டும் தனிப்படகு மூலம் கரைக்கு திரும்பி மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று தனி விமானம் மூலம் தில்லி செல்கிறார்

குமரியில் பிரதமர் மோடி: பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு
மக்களவைத் தேர்தல்: காஷ்மீர் டூ கன்னியாகுமரி - திருக்குறள் எக்ஸ்பிரஸில் அலசல்!

பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.பிரவேஷ்குமாா் தலைமையில் 8 மாவட்ட கண்காணிப்பாளா்கள் உள்பட 4 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனா். இம்மாவட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள 42 மீனவ கிராமங்களிலும் போலீஸாா் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

கடலோர காவல் படையினரும், விவேகானந்தா மண்டபத்தை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் ராணுவ கப்பலில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனா். பகவதி அம்மன் கோயில் மற்றும் விவேகானந்தா் மண்டபத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பிரதமர் வருகையையொட்டி, ஜூன் முதல் தேதி வரை விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு மூலம் சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி பகுதியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com