பிகாரில் பாலம் இடிந்த சம்பவங்கள்: உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்

மாநிலத்தில் உள்ள அனைத்து பழைய பாலங்களையும் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க வேண்டிய பாலங்களை அடையாளம் காணுமாறு
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

புது தில்லி: பிகாரில் தொடா்ந்து பல பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில், பாலங்களின் பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது.

பிகாரின் சிவான், சரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பாரண், கிசன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் நடப்பாண்டு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் கட்டுமானத்தில் இருந்த புதிய பாலங்களும் அடங்கும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து பழைய பாலங்களையும் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க வேண்டிய பாலங்களை அடையாளம் காணுமாறு சாலை கட்டுமானம் மற்றும் ஊரகப் பணிகள் துறைகளுக்கு முதல்வா் நிதீஷ் குமாா் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளாா். பலத்த மழையே இந்தச் சம்பவங்களுக்குக் காரணம் என்று மாநில அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநிலத்தில் உள்ள பாலங்களின் பாதுகாப்பு மற்றும் ஆயுள் குறித்த பொதுநல வழக்கை வழக்குரைஞா் பிரஜேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். அதில், ‘இந்தியாவில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக பிகாா் உள்ளது. மாநிலத்தின் பரப்பளவில் 73.06 சதவீதம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. பாலங்கள் தொடா்ந்து இடிந்து விழுவதால் பேரழிவு ஏற்படுவதுடன் மக்களின் உயிருக்கும் அது ஆபத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, மாநிலத்தில் உள்ள பழைய பாலங்கள் மற்றும் புதிதாக கட்டப்படும் பாலங்கள் அனைத்தும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உயா்நிலை குழு அமைக்க வேண்டும். மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி நிகழ்நேர கண்காணிப்பு நடத்தப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பாா்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமா்வு விசாரணைக்கு பட்டியலிட திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது. மேலும், இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com