முதல் நாளில் 45 வழக்குகளை விசாரித்த சஞ்சீவ் கன்னா!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நாளில் 45 வழக்குகளை விசாரித்துள்ளார்.
சஞ்சீவ் கன்னா
சஞ்சீவ் கன்னாPTI
Published on
Updated on
1 min read

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நாளில் 45 வழக்குகளை விசாரித்துள்ளார் நீதிபதி சஞ்சீவ் கன்னா.

உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று (நவ. 11) பொறுப்பேற்றுக்கொண்டார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த ஆண்டு மே 13-ஆம் தேதியுடன் சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது. இதனால், 6 மாதங்கள் மட்டும் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பொறுப்பு வகிப்பாா்.

முதல் நாளில் 45 வழக்குகள்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு நண்பகலிலேயே நீதிமன்ற வளாகத்திற்குள் சஞ்சீவ் கன்னா நுழைந்தார்.

அப்போது பார் கவுன்சில் தலைவர்கள், அட்டர்னி ஜெனரலும் மூத்த வழக்குரைஞருமான முகுல் ரோஹத்கி உள்ளிட்ட வழக்குரைஞர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தலைமை நீதிபதியாக தங்கள் பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என முகுல் ரோஹத்கி குறிப்பிட்டார்.

மேலும், சஞ்சீவ் கன்னா பதவியேற்பு குறித்து வெள்ளிக்கிழமை பேசிய அவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு தில்லி நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்பு ஒய்.கே. சபர்வால் தில்லி உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட சஞ்சீவ் கன்னாவுக்கு, வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தன. பிற்பகல் 2.30 மணிவரை நீதிமன்றத்தில் இருந்து 45 வழக்குகளை அவர் விசாரித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

1960-ஆம் ஆண்டு, மே 14-ஆம் தேதி பிறந்த சஞ்சீவ் கன்னா தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தாா். 2005-ஆம் ஆண்டு தில்லி உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவா், 2006-இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். கடந்த 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு பெறும் வயது 65 ஆகும். வயது அடிப்படையில் டி.ஒய்.சந்திரசூட்டுக்கு அடுத்த மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னா, தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவராகவும் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com