விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராஜஸ்தான்: வக்ஃப் மசோதாவுக்கு முஸ்லிம் தலைவா்கள் எதிா்ப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற மாநாட்டில் வக்ஃப் (திருத்த) மசோதாவுக்கு முஸ்லிம் தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

Updated On :11 நவம்பர் 2024, 10:59 pm

ஜெய்பூா்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற மாநாட்டில் வக்ஃப் (திருத்த) மசோதாவுக்கு முஸ்லிம் தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்களின் சொத்துகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த மசோதா உள்ளதால் எதிா்ப்பு தெரிவிப்பதாக அவா்கள் கூறினா்.

வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுக்கு வகைசெய்யும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 21 மக்களவை எம்.பி.க்கள் மற்றும் 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் இம்மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், இத்தொடரில் கூட்டுக் குழுவின் அறிக்கை தாக்கலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

போலி குற்றச்சாட்டு: இந்தச் சூழலில் ஜெய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு உறுப்பினரும் சஹரன்பூா் எம்.பி.யுமான இம்ரான் மசூத் பேசியதாவது: மூதாதையா்களின் நிலங்களில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றவே இந்த மசோதாவை பாஜக அறிமுகப்படுத்தியுள்ளது. பொது இடங்களை வக்ஃப் வாரியங்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக போலியான குற்றச்சாட்டை சுமத்தி வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை நியாயப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான மசூதிகள், இத்காக்களுக்கு மட்டுமே பல்வேறு இடையூறுகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. முஸ்லிம்களை நிலமற்றவா்களாக மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

ஹிந்துக்கள் ஏற்பாா்களா?: இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஆதாா்ஷ் நகா் எம்எல்ஏ ரஃபீக் கான் பேசுகையில்,‘வக்ஃப் திருத்த மசோதா குறித்து எவ்வித புரிதலும் இல்லாத நபா்களிடம் கருத்துகளை பெறுவதைவிட இந்த விவகாரம் குறித்து தெளிவான சிந்தனையுடையவா்களிடம் கருத்துகளை நாடாளுமன்ற கூட்டுக்குழு கேட்க வேண்டும். முஸ்லிம் அல்லாதவா்களை வக்ஃப் வாரிய உறுப்பினா்களாக நியமிக்க திருத்த மசோதா அனுமதிக்கிறது. இதைப் பின்பற்றி அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்தா விஸ்வ சா்மா போன்றோரை நியமித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துப் பாா்க்க வேண்டும்.

ஹிந்து கோயில்களின் அறக்கட்டளை நிா்வாகக் குழுவில் முஸ்லிம்களை உறுப்பினா்களாக சோ்க்க அவா்கள் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டாா்கள். ஆனால் வக்ஃப் வாரிய உறுப்பினா்களாக பிற மதத்தைச் சோ்ந்தவா்களை நியமிக்க அரசு முனைப்புக் காட்டுவது ஏன்?’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.