
காங்கிரஸ் கட்சியை இடஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி என விமர்சித்த அமித் ஷா பாஜகவின் கடைசி எம்எல்ஏ இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
ஜார்கண்டில் மாநிலத்தின் தன்பாத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “காங்கிரஸ் இடஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி. அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டை நிறுத்தி முஸ்லிம்களுக்கு வழங்கவுள்ளனர். பாஜகவின் கடைசி எம்எல்ஏ இருக்கும்வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ”ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அமைச்சர் ஆலம்கீர் ஆலம் வீட்டில் ரூ. 35 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. காங்கிரஸ் எம்பி வீட்டில் ரூ. 350 கோடி கைப்பற்றப்பட்டது. இவை யாருடைய பணம்?
இந்தப் பணம் முழுக்க தன்பாத்த்தின் இளைஞர்கள் மற்றும் தாய்மார்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது. இவ்வாறு கொள்ளையடித்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றை நாங்கள் சரிசெய்வோம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழல், நில ஊழல், சுரங்க ஊழல் என ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.
எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தால் 'சங்கல்ப் பத்ரா' திட்டத்தை செயல்படுத்துவோம். நாங்கள் வழங்கும் அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றுவோம். பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.2,100 டெபாசிட் செய்யப்படும். நாடு முழுவதும் உள்ள எரிவாயு விலை போன்று இல்லாமல் இங்கு ரூ.500 க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். மேலும், தீபாவளி மற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகைகளுக்கு இரண்டு இலவச கேஸ் சிலிண்டர்களை பாஜக அரசு வழங்கும்.
பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு ரூ. 2,000 வழங்கப்படும். விவசாயிகளின் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,100 க்கு கொள்முதல் செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியம் ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும்," என்று அவர் தெரிவித்தார்.
ஊடுருபவர்கள் விவகாரம் குறித்து பேசிய அமித் ஷா, ”ஜார்கண்ட் மாநிலத்தின் உணவு மற்றும் வேலைகளை அவர்கள் பறிக்கிறார்கள்.
பழங்குடியினப் பெண்களை 2, 3 ஆவது திருமணம் செய்து அவர்களின் நிலத்தை கையகப்படுத்துகிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததும், ஊடுருவியவர்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து அவர்களை இங்கிருந்து வெளியேற்றுவோம்", என்று அவர் கூறினார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நாளையும் (நவ. 13), 2 ஆம் கட்ட தேர்தல் நவம்பர் 20-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. நவம்பர் 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றி பெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.