
பாட்னாவில் மருத்துவமனையில் உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்து விட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியதால், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
பாட்னாவில் ஃபண்டுஷ் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, ஃபண்டுஷ் வெள்ளிக்கிழமை (நவ. 15) உயிரிழந்தார்.
இரவு வேளை ஆனதால், அவரது உடலை உடற்கூறாய்வு செய்யாமல், தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைத்தனர். இதனையடுத்து, மறுநாள் சனிக்கிழமை காலையில், ஃபண்டுஷின் இடது கண் காணாமல் போய்விட்டது. இந்த சம்பவத்தையடுத்து, ஃபண்டுஷின் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... அரசு மருத்துவமனைகளின் இன்னொரு பக்கம்!
தொடர்ந்து, நாளந்தா மருத்துவமனை கண்காணிப்பாளர் வினோத் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவரும் விசாரணை மேற்கொண்டார். ஃபண்டுஷ் கண் காணாமல் போனது குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஃபண்டுஷ் கண்களின் மீது ஒரு எலி இருந்ததாகவும், கண்ணை எலி கடித்திருக்கலாம் என்றும் கூறினர்.
இருப்பினும், ஃபண்டுஷ் படுக்கையின் அருகே ஒரு கத்தி இருந்ததாகவும், மருத்துவர்கள்தான் அவரது கண்ணை திருடியுள்ளதாகவும் ஃபண்டுஷின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கண்காணிப்பாளர் வினோத் குமார் ``கண்ணை வெளியே எடுத்திருந்தாலும் சரி, எலி கடித்திருந்தாலும் சரி. அது நம்முடைய தவறுதான். சிசிடிவி காட்சிகளை மதிப்பாய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.