

நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் முதல் சோதனை ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹைதராபாத்திலுள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை ஆய்வகங்கள் வளாகத்தில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டிஆா்டிஓவின் ஆய்வகங்கள் மற்றும் பிற இந்திய தொழிற்சாலைகளால் இணைந்து இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. 1,500 கி.மீ. தொலைவுக்கும் அப்பால் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை பொருந்தியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால்(டிஆர்டிஓ) இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனை மூலம், நெடுந்தொலைவு சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ‘ஹைப்பர்சோனிக் திட்டம்’ இந்திய வரலாற்றில் முதல்முறையாக நிகழ்த்தப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் ரஷியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளது. பாதுகாப்புத்துறையில் மாபெரும் திருப்புமுனையாக இந்த ஏவுகணை சோதனை அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கும்(டிஆர்டிஓ), பாதுகாப்புப் படைக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.