மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார், பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பாரமதி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
சரத் பவார் அணியான தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட உறவினர் யுகேந்திர பவாரை விட அதிக வாக்குகள் பெற்று அஜித் பவார் தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
அஜித் பவார், தனது அரசியல் வாழ்க்கையில், ஐந்து முறை மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் பதவியை வகித்துள்ளார். மிகக் குறைந்த காலமே துணை முதல்வர் பதவியை வகித்தவர் என்ற பெயரையும் இவர் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 3 நாள்கள் மட்டுமே மாநில துணை முதல்வராக அஜித் பவார் இருந்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், மாநில நிதித்துறை மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் பதவிகளையும் வகித்தவர்.
ஏழு முறை, பாரமதி தொகுதி எம்எல்ஏவாக அஜித் பவார் இருந்துள்ளார். எனவே, இந்த முறையும் அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இவரை எதிர்த்துப் போட்டியிடும் யுகேந்திர பவார், அஜித் பவாரின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் பவாரின் மகன் ஆவார்.