
உத்தரகண்ட் மாநிலத்தில், திருமண வீட்டார் சென்ற கார் 200 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த சம்பவத்தில், அதிலிருந்த 3 பேர் பலியானதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமண வீட்டார் வந்த கார், வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு விபத்தில் சிக்கியதாகவும், விபத்து நேரிட்டபோது காரில் 13 பேர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலதாமதத்தால், முக்கிய சாலையை தவிர்த்துவிட்டு ஓட்டுநர், இரவு நேரத்தில் குறுக்கு வழியில் வேகமாகச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, உத்தரகண்ட் மாநிலத்தில், திருமண வீட்டார் சென்ற பேருந்து 200 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த சம்பவத்தில், அதிலிருந்த 30 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததாகவும், இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பெரும்பாலானோர் பலியாகியிருப்பதாகவும் கூறப்பட்டது.
உள்ளூர் மக்களுடன் காவல்துறையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன்.
இந்த விபத்து நிகழ்ந்த இடம், மணமகள் வீட்டிலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில்தான் என்றும், ஹரித்வார் மாவட்டம் லால்தாங்கிலிருந்து பௌடியின் பிரோன்கல் நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
மலைப் பிரதேசமான உத்தரகண்ட் மாநிலத்தில், அவ்வப்போது சாலை விபத்துகளும், அதிகமாக சாலையோர பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் நடைபெறுகிறது. மலைப் பிரதேசம் என்பதால், சாலைப் போக்குவரத்தைத் தவிர வேறு எந்த வழியும் இல்லாதது மற்றும், கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில்தான் பல சாலைகள் அமைந்திருக்கின்றன என்பதும் உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.