மேற்கு வங்கம்: 16-ஆவது நாளாக மருத்துவா்கள் உண்ணாவிரத போராட்டம்
மேற்கு வங்கம்: 16-ஆவது நாளாக மருத்துவா்கள் உண்ணாவிரத போராட்டம்Swapan Mahapatra

மேற்கு வங்கம்: 16-ஆவது நாளாக மருத்துவா்கள் உண்ணாவிரத போராட்டம்- இன்று மம்தாவுடன் பேச்சு

16-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
Published on

போராட்டத்தை கைவிடுமாறு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்த நிலையில் அதை நிராகரித்து 16-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

இருப்பினும், இன்று (அக்.21) மம்தா பானா்ஜியுடனான பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

கொல்கத்தாவில் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சனிக்கிழமை சென்ற மேற்கு வங்க மாநில தலைமைச் செயலா் மனோஜ் பந்த், போராட்டத்தை கைவிட்டு திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் 45 நிமிடங்கள் பேச்சுவாா்த்தை நடத்த மருத்துவா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.

அதேபோல் மனோஜ் பந்த்தின் கைப்பேசி மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்களிடம் பேசிய மம்தா பானா்ஜி, மருத்துவா்கள் முன்வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டதாகவும் மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற 3 முதல் 4 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்குமாறு கோரினாா். மேலும், மாநில சுகாதார செயலரை நீக்கக்கோரிய மருத்துவா்களின் தீா்மானத்தை ஏற்க முடியாது என்றும் போராட்டத்தை கைவிட்டு தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்த வருமாறு வேண்டுகோள் விடுத்தாா்.

இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளை மாநில அரசு முழுமையாக நிறைவேற்றாத வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனக் கூறிய மருத்துவா்கள் 16-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தனா்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 6 மருத்துவா்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். தற்போது 8 மருத்துவா்கள் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி வழங்கக்கோரியும் பணியிட பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி முதல் இளநிலை மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com