

தொடரும் வெடிகுண்டி மிரட்டல்களால் நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க தேசிய புலனாய்வு முகமை முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலுள்ள முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஆய்வுக் குழுக்களை (பிடிஏசி) அமைத்து அதில் சைபர் பிடிவு அதிகாரிகளை தேசிய புலனாய்வு முகமை பணியமர்த்தியுள்ளது.
கடந்த இரு வாரங்களில், இந்திய விமானங்களுக்கு 140 -க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், பயணிகளின் பாதுகாப்பு குறித்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற அச்சுறுத்தல்கள் குறித்து திறம்பட விசாரிக்க தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சைபர் பிரிவு, வெளிநாடுகளில் இருந்து வரும் இந்த மிரட்டல் அழைப்புகள் குறித்த விரிவான ஆய்வைத் தொடங்கியுள்ளது என்றும், அச்சுறுத்தல் அழைப்புகளுக்குப் பின்னுள்ள நோக்கங்களைக் கண்டறிவதில் விசாரணை கவனம் செலுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு முகமை நாட்டின் ஒவ்வொரு முக்கிய விமான நிலையத்திலும் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஆய்வுக் குழுவை நியமித்துள்ளது. அவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை தீவிரப்படுத்தி , அச்சுறுத்தல்கள் தொடர்பான குற்றங்களை உடனடியாகக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும், விமான பயணத்தில் பாதுகாப்பை உறுதிசெய்யவும் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமை தனியாக செயல்படாமல் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது.
புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறுகையில், ”சமீபத்திய அச்சுறுத்தல் அழைப்புகள் பாதுகாப்பு முகமைகளுக்கு போக்குவரத்து தொடர்பான சவாலாக மட்டுமின்றி உண்மையான அச்சுறுத்தல்களிலிருந்து திசைதிருப்பும் ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, ஒவ்வொரு அழைப்பின் நம்பகத்தன்மையையும் கடுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம்” என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.